படிக மலையில் இளவரசி
உத்தான தேசத்தின் அரசன் கர்வம் மற்றும் வீரமுள்ளவன். போர் இல்லாதபோது, வேட்டைக்குச் செல்வான். அவன் கொடூரமான மிருகங்களை மட்டுமே வேட்டையாடுவான். மற்ற வேட்டைக்காரர்களைப் போல் சிறிய, ஏழை விலங்குகளை வேட்டையாடுவது அவனுக்குப் பிடிக்காது.
ஒருமுறை அவன் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு கொடூரமான விலங்கையும் பார்க்கவில்லை. இருட்ட தொடங்கியதும், அவன் வீடு திரும்பும் போது, புதர்களுக்குப் பின்னால் ஏதோ அசைவது போல் உணர்ந்தான். அரசன் அதைத் துரத்தினான். அது விலங்கு அல்ல, குள்ளமான காட்டு இனத்தைச் சேர்ந்த மனிதன். அவனுடைய முடி கலைந்து தாடி நீளமாக இருந்தது.
அந்த காட்டு மனிதனைப் பிடித்து அரசன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனுக்காக ஒரு அறை கட்டினான். அந்த அறைக்கு ஜன்னல்கள் இல்லை. தரையில் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கும் அளவுக்கு ஒரு துளை இருந்தது. அவன் அந்த அறையை பூட்டி சாவியை அந்தப்புரத்தில் வைத்தான். இந்த காட்டு மனிதன் தப்பி ஓட யார் உதவி செய்தாலும், அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்று அரசன் அறிவித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, உத்தான தேசத்தின் அண்டை நாட்டின் மீது எதிரி படையெடுத்தான். அந்த நாட்டின் அரசன் உத்தான தேசத்தின் அரசனிடம் உதவி கேட்டான். அரசன் உதவிக்குச் சென்றான். செல்லும் போது, அந்த காட்டு மனிதனைப் பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை ராணியிடம் கொடுத்து சென்றான். ராணி அந்த சாவியை எப்போதும் தன் சேலையில் முடிந்து வைத்திருப்பாள்.
உத்தான தேசத்தின் அரசனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனுடைய பெயர் பிரமத்ர. அரசன் அவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தான். அந்த பையன் பந்து விளையாடிக் கொண்டு காட்டு மனிதன் இருக்கும் அறைக்கு சென்றான். எதிர்பாராத விதமாக அவன் பந்து அந்த துளைக்குள் விழுந்தது. ஆச்சரியமாக அது மீண்டும் அதே போல் வெளியே வந்தது. பையனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் மீண்டும் பந்தை உள்ளே போட்டான், பந்து மீண்டும் வெளியே வந்தது. இது இரண்டு மூன்று முறை நடந்தது. அவன் மீண்டும் பந்தை உள்ளே போட்டான். இந்த முறை பந்து வெளியே வரவில்லை.
பிரமத்ரன் துளை அருகில் சென்று உள்ளே பார்த்தான். காட்டு மனிதன் கையில் பந்து இருந்தது. அவன் சொன்னான், "அது என் பந்து, அதை திருப்பிக் கொடு!"
"இந்த அறையிலிருந்து என்னை விடுவித்தால் தருகிறேன்," என்று காட்டு மனிதன் சொன்னான்.
பையன் தன் அம்மாவின் சேலையில் கட்டியிருந்த சாவியை அவள் அறியாமல் எடுத்தான். பூட்டைத் திறந்து அறையின் கதவைத் திறந்தான். காட்டு மனிதன் வெளியே வந்தான். இளவரசனுக்கு பந்தைக் கொடுத்தான். இளவரசன் மீண்டும் சாவியை அம்மாவின் சேலையில் கட்டி வைத்தான். காட்டு குள்ளன் தப்பி ஓடிவிட்ட செய்தி தலைநகரம் முழுவதும் பரவியது, ஆனால் அவன் எப்படி தப்பித்தான் என்று யாருக்கும் தெரியவில்லை.
மறுநாள் அரசன் திரும்பி வந்தான். அவன் அண்டை நாட்டு அரசனுக்கு வெற்றி பெற்று கொடுத்திருந்தான். காட்டு குள்ளன் காணாமல் போனது அவனுக்குத் தெரிந்தது. அரசனுக்கு மிகுந்த கோபம் வந்தது. விசாரணையைத் தொடங்கினான். அப்பா கோபமாக இருக்கிறார் என்று தெரிந்தும், பிரமத்ரன் நடந்ததை எல்லாம் உண்மையாய் சொன்னான். அரசன் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தான். ஏனென்றால், தன்னுடைய ஒரே மகனை மரணத்தில் தள்ளுவதாக அவன் அறிவித்திருந்தான். இருந்தாலும் தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள இரண்டு வீரர்களுக்கு இளவரசனை காட்டிற்கு கொண்டு சென்று தலையை துண்டித்து இதயத்தை எடுத்து வர ஆணையிட்டான். ராஜாவின் கட்டளை கேட்டு தலைநகரம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.
வீரர்கள் இளவரசனை காட்டுக்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த சிறுவனை கொல்ல அவர்களின் கைகள் நடுங்கின. அவர்கள் பிரமத்ரனை தூரமான காட்டில் அழைத்துச் சென்று கூறினார்கள், "இளவரசே, உங்களை கொல்ல நாங்கள் தயாராக இல்லை. நீங்கள் வேறு ஒரு நாட்டிற்கு சென்று வாழுங்கள். நீங்கள் இந்த நாட்டிற்கு வந்தால், எங்களின் தலை துண்டிக்கப்படாமல் இருக்காது. கடவுள் உங்களை காப்பாற்றுவார்!"
பிரமத்ரன் காட்டில் தூரம் சென்றான். தூரத்தில் ஒரு கோட்டையின் சுவர் தெரிந்தது. அவன் அந்த கோட்டையை நோக்கி நடந்தான். வழியில் ஒரு இடையனை சந்தித்தான். அவனுடைய உடைகளை கேட்டு வாங்கி, தன்னுடைய உடைகளை அவனுக்கு கொடுத்தான். இடையனின் உடையை அணிந்து கோட்டைக்குள் சென்றான். அவன் அரசனிடம் சொன்னான், "மகாராஜா, எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள். நீங்கள் என்ன வேலை கொடுத்தாலும் நான் செய்வேன்."
அரசன் ஆடுகளை மேய்க்கும் வேலை கொடுத்தான். அந்த அரசனுடைய பெயர் சசிவர்ணன். அவனுக்கு சசிகலா என்று ஒரு அழகான மகள் இருந்தாள். பத்து பன்னிரண்டு வருடங்கள் ஓடின. சசிகலா பெரியவளாக வளர்ந்தாள். அவளுடைய அழகு உலகம் முழுவதும் பரவியது. சசிவர்ணன் தன் மகளிடம் சொன்னான், "மகளே, உன்னை திருமணம் செய்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இளவரசர்கள் வந்துள்ளனர். நீ யாராவது ஒருவரை தேர்ந்தெடு."
சசிகலா சொன்னாள், "அப்பா, நான் சுயம்வரத்திற்கு தயாராக இருக்கிறேன். யார் ஒருவர் நம் அரண்மனைக்கு அருகில் இருக்கும் படிக மலையின் மீது குதிரையை வேகமாக ஓட்டி வந்து என் கையில் இருக்கும் பழத்தை வாங்குகிறார்களோ, அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்." அரசன் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். நிறைய இளவரசர்கள் வந்தார்கள், ஆனால் அந்த படிக மலை மிகவும் வழுக்கும் தன்மையுடன் இருந்தது. அதனால், யாராலும் ஏற முடியவில்லை. நிறைய பேருக்கு கை கால் எலும்பு முறிந்தது.
பிரமத்ரன் இவை அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் சசிகலாவை திருமணம் செய்து கொள்ள ஆசை இருந்தது. ஆனால், அவன் இடையனின் உடையில் இருந்தான். அவன் சோகமாக உட்கார்ந்திருந்த போது, அதே காட்டு குள்ளன் அங்கு வந்தான். அவன் பிரமத்ரனிடம் கேட்டான், "ஏன் சோகமாக இருக்கிறாய்?" பிரமத்ரன் தன் கஷ்டத்தை சொன்னான். குள்ளன் சொன்னான், "நீ கவலைப்படாதே, நான் உனக்கு இளவரசனுக்கு ஏற்ற உடையும் ஒரு நல்ல குதிரையும் கொடுக்கிறேன்."
பிரமத்ரன் ராஜ உடைகளை அணிந்து ஒரு சிறந்த குதிரையில் ஏறி படிக மலையின் அருகில் சென்றான். அவன் குதிரையை தட்டி மலை உச்சியில் அம்பைப் போல் சென்று சேர்ந்தான். இளவரசி அவனுக்கு பழத்தை கொடுத்தாள். பிரமத்ரன் அந்த பழத்தை எடுத்துக் கொண்டு அப்படியே கீழே இறங்கி சென்று தன்னுடைய இடையனின் உடைகளை அணிந்து வேலையில் ஈடுபட்டான்.
அரனுக்கும் இளவரசிக்கும் கேள்வி என்னவென்றால் அந்த இளவரசன் யார்? அரசன் நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று ஆணையிட்டான். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வந்தார்கள். சசிகலா ஒவ்வொருவரையும் உற்று நோக்கினாள். ஆனால் அந்த இளவரசன் அங்கு இல்லை. இறுதியில் இடையர்களின் முறை வந்தது. பிரமத்ரனை பார்த்ததும் அவள் சந்தோஷமாக கத்தினாள், "இவர்தான்! இவர்தான் அந்த இளவரசன்!"
மற்றவர்கள் அனைவரும் சிரித்தார்கள். ஆனால் சசிகலா தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள். அரசன் பிரமத்ரனை அருகில் அழைத்து விசாரித்தான். அப்போது அவன் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சொன்னான். தன்னுடைய மகள் யாரை தேர்ந்தெடுத்தாளோ அவன் ஒரு இளவரசன் என்று அறிந்ததும் அரசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவன் உத்தான அரசனுக்கு தூது அனுப்பி இந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்னான். உத்தான அரசனும் ராணியும் திருமணத்திற்கு வந்தார்கள். பிரமத்ரன் மற்றும் சசிகலாவின் திருமணம் சிறப்பாக நடந்தது.