All Tamil Stories
மகனின் முடிவு
ஆப்பிரிக்க நாட்டின் ஒரு காட்டுக்கு அருகில் டோடன் என்ற ஏழை மனிதன் வசித்து வந்தான். காட்டில் விறகுகளை வெட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு துண்டி என்ற மகன் இருந்தான். துண்டி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தான். அதை பார்க்கும் போது அவனுடைய மனம் சந்தோஷத்தால் நிறைந்தது. துண்டிக்கு பன்னிரண்டு வயதாகியது. துண்டி தனக்கு உதவி செய்வான் என்றும், தனது வாழ்க்கை வசதியாக இருக்கும் என்றும் அவன் நம்பினான். இப்போது துண்டியும் தனது தந்தையுடன் காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டுவதில் உதவி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் டோடன் நோய்வாய்ப்பட்டான். அவனால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை, அதனால் அவன் தனது மகனை காட்டுக்கு சென்று விறகுகளை வெட்ட சொன்னான். துண்டி தனது தந்தையின் கட்டளைப்படி காட்டுக்கு புறப்பட்டான். வழியில் அவனுக்கு ஒரு நண்பன் தென்பட்டான். நீண்ட நேரம் அவன் தனது நண்பனுடன் விளையாடினான். மதியம் திரும்பி செல்வதற்கு முன் அவன் சிறிது விறகுகளை வெட்டினான், பிறகு அவன் வீட்டிற்கு திரும்பினான்.
அதை பார்த்ததும் டோடன் மிகவும் கோபப்பட்டான். அவன் கோபமான குரலில் கூறினான், "நீ ஒரு சோம்பேறி, நீ எந்த வேலைக்கும் லாயக்கில்லை. இவ்வளவு குறைவான விறகுகளை கொண்டு வந்திருக்கிறாய், இதனால் என்ன செய்ய முடியும்? இன்று விறகுகளை விற்கவில்லை என்றால் நாளை என்ன சாப்பிடுவது? எப்படி வாங்குவது?" அவன் துண்டியை கோபமாக திட்டினான், மேலும் அவனை நன்றாக அடித்தான். பாவம் துண்டி அழுதுக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான். "போ, இங்கிருந்து ஓடிவிடு, வீட்டில் கால் வைத்தாய் என்றால் காலை உடைத்து விடுவேன். தன்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று கத்திக் கத்தி டோடன் களைத்துப்போய் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டான்.
துண்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! அவன் காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தூரம் சென்ற பிறகு அவன் களைத்து போனான். அவனுக்கு பசி எடுத்தது. பசியால் அவன் வாடினான். ஒரு அடி கூட அவனால் எடுத்து வைக்க முடியவில்லை. அவன் ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டான்.
மாலை ஆனது. ஒரு வியாபாரி தன்னுடைய வேலைக்காரர்களுடன் நகரத்திலிருந்து தன்னுடைய கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான். அவர்கள் மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த அந்த பையனை பார்த்தார்கள். அவர்கள் அவனை எழுப்பி கேட்டார்கள், "நீ யார்? இந்த அடர்ந்த காட்டில் ஏன் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் இந்த நேரத்தில்?"
"எனக்கு வீடில்லை, எனக்கு மிகவும் பசிக்கிறது." என்று துண்டி சோகமான குரலில் பதில் சொன்னான். வியாபாரி அவனுக்கு கொஞ்சம் ரொட்டிகளை கொடுத்தான். ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு அவன் தண்ணீர் குடித்தான். அந்த அனாதையைப் பற்றி வியாபாரியின் மனதில் இரக்கம் உண்டானது. அவனுக்கும் குழந்தை இல்லை. வியாபாரி துண்டியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
மதியம் ஆகியும் பையன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. இப்போது டோடனுக்கு கவலை ஏற்பட ஆரம்பித்தது. தான் அவனை அதிகமாக பேசிவிட்டதாக நினைத்தான். அவனுடைய கவலை அதிகரித்தது. நாட்கள் உருண்டோடின, ஆனால் மகனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. மிகுந்த கவலையுடன் அவன் தனது மகனுக்காக காத்திருந்து நாட்களை கழித்தான்.
இங்கே வியாபாரி துண்டியை தனது மகனைப் போலவே வளர்க்க ஆரம்பித்தார். அவன் இப்போது வியாபாரத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டான். அவனுடைய நாட்கள் வசதியாக சென்றன. அவனுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனாலும் அவனுக்கு அவனுடைய அம்மா அப்பா ஞாபகம் வரும்போது அவன் மிகவும் வருத்தப்படுவான். அவர்களுடைய நினைவுகளை நினைத்து அவன் எங்கோ தூரத்தில் தனியாக உட்கார்ந்து இருப்பான். அவன் தனது அம்மா, அப்பா மற்றும் வீட்டை மறக்க முடியவில்லை.
வியாபாரியின் மனைவிக்கும் துண்டியை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அவன் நேர்மையான மற்றும் விசுவாசமான பையனாக இருந்தான். அவளும் தனது சொந்த மகனைப் போலவே அவனுக்கு எல்லாமே செய்தாள், மேலும் சொந்த அம்மாவைப் போலவே அவன் மீது அன்பு காட்ட ஆரம்பித்தாள். இப்படி சில வருடங்கள் கழிந்தன.
ஒரு நாள் டோடன் காட்டில் கிடைத்த யானை தந்தத்தை நகரத்தில் விற்று திரும்பிக் கொண்டிருந்த போது, தன்னுடைய மகனைப் போல் இருந்த ஒரு இளைஞனைப் பார்த்து அவன் கத்தினான், "மகனே, நில்." குதிரை வீரன் நின்றான். அருகில் சென்று அந்த இளைஞனை உற்றுப் பார்த்து அவன் சொன்னான், "நீ துண்டி தானே, என்னுடைய காணாமல் போன மகன் தானே?"
துண்டி குதிரையிலிருந்து இறங்கி சொன்னான், "ஆமாம் நான் துண்டி தான்." என்று சொல்லி தன்னுடைய அப்பாவுக்கு வணக்கம் செய்தான். தனது வயதான அப்பாவின் நிலையைப் பார்த்து துண்டிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவன் சொன்னான், "அப்பா, இப்போது நான் எந்த வீட்டில் வசிக்கிறேனோ, அங்கே என்னுடன் வாருங்கள். சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு பிறகு செல்லலாம்." துண்டி சொன்னதை டோடன் கேட்டான்.
இருவரும் வியாபாரியின் வீட்டிற்கு வந்தார்கள். துண்டி வியாபாரியிடம் தனது அப்பாவை அறிமுகம் செய்தான். வியாபாரி அவனுக்கு மிகவும் நல்ல உபசரிப்பு செய்தார். காலையில் வீட்டிற்கு திரும்பும்போது டோடன் வியாபாரியிடம் சொன்னான், "நான் எனது மகனை என்னுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல போகிறேன்."
"இது எப்படி சாத்தியமாகும் நண்பரே, இப்போது அவன் உன்னுடைய மகன் இல்லை, என்னுடைய மகன். நீதானே அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாய். நான் அவனை அடைக்கலம் கொடுத்து, வீட்டிற்கு அழைத்து வந்து, அவனை வளர்த்தேன், அப்போது அவனுக்கு வீடு இல்லை. இப்போது இதுதான் அவனுடைய வீடு." என்று வியாபாரி பணிவாக சொன்னான். "கடவுளின் கருணையால் எனக்கு எனது மகன் திரும்ப கிடைத்துவிட்டான். உண்மைதான் நான் அவன் மீது கோபப்பட்டேன், அவன் வீட்டை விட்டு சென்றான், ஆனால் அப்பா மகனுக்குள் இப்படி சண்டைகள் வருவது சகஜம்தான். இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான்."
இப்படி இருவரும் இந்த விஷயத்தைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார்கள். கடைசியாக வியாபாரி சொன்னான், "இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளது, துண்டி இங்கே இருக்கப் போகிறானா அல்லது உன்னுடன் வர போகிறானா என்ற முடிவை துண்டியே எடுக்கட்டும். இதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு."
"ஆமாம், ஆமாம், இந்த நிபந்தனை எனக்கு சம்மதம், துண்டி தான் முடிவு செய்வான்." என்று டோடன் சந்தோஷமாக சொன்னான். "சரி, நாளை காலை இதற்கான முடிவை எடுக்கலாம்." என்று வியாபாரி சொன்னான்.
மறுநாள் அப்பா மகனை கூட்டிக்கொண்டு வியாபாரி முன்னே நடந்தான், அவனுடைய கையில் பளபளப்பான மற்றும் நீளமான வாள் இருந்தது. அப்பா மகனுக்கு வியாபாரி என்ன செய்கிறான் என்று புரியவில்லை, அவர்களை எங்கே அழைத்து செல்கிறான்! அவர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நதிக்கும் காடுகளுக்கும் நடுவில் ஒரு அமைதியான இடம் இருந்தது, அங்கே வியாபாரி நின்றான். அவன் வாளை துண்டியின் கையில் கொடுத்து சொன்னான், "மகனே, நீ இப்போது உன்னுடைய கடமையை செய்."
துண்டி பணிவாக சொன்னான், "ஆனால் எனக்கு சொல்லுங்கள், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?"
"நீ உன்னுடைய அப்பாவுடன் செல்ல முடிவு செய்திருந்தால் என்னுடைய தலையை வெட்டிவிடு. ஆனால் நீ உன்னுடைய இன்னொரு அப்பாவுடன் இருக்க விரும்பினால் அவருடைய தலையை வெட்டிவிடு."
துண்டி சிறிது நேரம் அமைதியாக அப்படியே நின்றான். அவனால் எதுவும் முடிவு செய்ய முடியவில்லை. அவன் இருவரையும் வணங்கி சொன்னான், "எனக்கு இப்போது தெரியும் எனது கடமை என்னவென்று! நான் நானே என்னுடைய தலையை வெட்டிக் கொள்கிறேன்." என்று சொல்லி அவன் வாளை எடுத்தான்.
இருவரும் பெரிய குரலில் அவனை கெஞ்சி கேட்டார்கள், "மகனே நில், இப்படி செய்யாதே."
மூன்று பேரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. அவர்கள் இப்போது இந்த பிரச்சினைக்கு இன்னொரு தீர்வை கண்டுபிடித்தார்கள். டோடனும் அவனுடைய மனைவியும் இருவரும் வியாபாரியின் வீட்டிலேயே வந்து தங்கினார்கள். இப்படி துண்டி தன்னை பெற்ற மற்றும் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மா அப்பாவிற்கு நியாயம் செய்தான். இருவரையும் சந்தோஷப்படுத்தினான். இப்போது இருவருக்கும் எந்த குறையும் இல்லை. இப்போது அவனுக்கு இரண்டு அம்மா மற்றும் இரண்டு அப்பா இருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது மிகவும் அன்பு செலுத்துகிறார்கள்.